தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், டிசம்பர் 30, 31, ஜனவரி 1 ஆகிய 3 நாட்கள் அரசுத்துறை அலுவலர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 30) முதல் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலா, ஆதிராவிடர் நலத்துறை செயலாளர் லட்சுமிபிரியா ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர்.
இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, அரசுத்துறை அலுவலர்கள் யாருக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை கிடையாது என அறிவித்துள்ளார். அனைத்து துறைகளை சார்ந்தவர்களும் இந்த 3 நாட்களும் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணிபுரியும் கிராமத்திலேயே தங்கியிருக்க வேண்டும். வட்டாட்சியர் உள்ளிட்டோர் தங்கள் அலுவலகங்களில் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.