தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஜனவரி 4, 5ஆம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அடுத்த 7 நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைப் பொறுத்தவரை, நேற்று (ஜனவரி 1) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து இன்று (ஜனவரி 2), தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று மற்றும் நாளை (ஜனவரி 2, 3) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜனவரி 4, 5ஆம் தேதிகளில் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.