புதுச்சேரியில் ஜனவரி முதல் மீண்டும் ஹெல்மெட் கட்டாயம் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
புதுச்சேரி மாநிலத்தில் சாலை விபத்துகள் அதிகரித்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென உத்தரவிடப்பட்டது. ஹெல்மெட் அணியாதோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், இத்திட்டம் திரும்ப பெறப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2022aஅம் ஆண்டு நவம்பரில் மீண்டும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இத்திட்டத்தை ரத்து செய்ய பல்வேறு தரப்பினர் மக்கள் பிரதிநிதிகள் முதலமைச்சரை நேரடியாக சந்தித்து வலியுறுத்தினர். இதனால், ஹெல்மெட் அணிவதை போக்குவரத்து போலீசார் கட்டாயப்படுத்தாமல் இருந்தனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் சாலை விபத்துகளில் ஹெல்மெட் அணியாமல் சென்று உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதால், மீண்டும் ஹெல்மெட் திட்டத்தை கொண்டு வர போக்குவரத்து காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். 2025 ஜனவரி மாதம் முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென போக்குவரத்து காவல்நிலையங்களில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாவிட்டால், ரூ.1,000 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை பொதுமக்களிடம் விளக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்த போலீசார் துவங்கியுள்ளனர்.
Read More : 7.3 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! இடிந்து விழுந்த கட்டிடங்கள்..!! சுனாமி எச்சரிக்கை..!!