கோடைக்காலத்தில் வாட்டும் வெயிலை சமாளிக்கும் வகையில் உணவுப்பொருட்கள் நீர்ச்சத்து கொண்ட பானங்களை அருந்தவேண்டும். அந்தவகையில் வெயிலை சமாளிக்க இந்த 5 வழிமுறைகள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.
வெயில் காலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் சில உணவுகளும் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கிறது. நாள் முழுவதும் அவ்வபோது தண்ணீர் அருந்தி நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்வதுடன் நம் உடலை குளுமையாக வைத்துக் கொள்ள பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றலாம். கோடை காலத்தில் நேரடியாக தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும் என்பதில்லை. நீர் சத்து கொண்ட பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களும் கூட நல்ல பலனை தரும். அந்த வகையில் இளநீர், தர்பூசணி, நுங்கு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். தண்ணீரில் ஊற வைத்த சப்ஜா விதைகள், பாதாம் பிசின் போன்றவற்றை ஜூஸ் மற்றும் சாலட் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம். அது மிகுந்த குளிர்ச்சியை தரும்.
இறுக்கமான உடைகளை அணிவதால் உடலுக்குள் புழுக்கம் மென்மேலும் அதிகரிக்கும். தளர்வான உடைகள், அதுவும் பருத்தியில் தயாரான உடைகளை அணிந்தால் உடலுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும். கருப்பு நிற ஆடைகள், அடர் நிறம் கொண்ட ஆடைகளை தவிர்த்து லேசான நிறம் கொண்ட ஆடைகளை அணியவும். வெளியிடங்களுக்கு செல்பவர்கள் வெயிலில் இருந்து ஒதுங்கி நிழல் கொண்ட மரத்தடியில் அல்லது பேருந்து நிறுத்தம் போன்ற பொது இடங்களில் ஓய்வு எடுத்துக் கொள்ளவும்.
கோடை காலத்தில் கடுமையான பயிற்சிகள் செய்வது உடலுக்கு சோர்வை ஏற்படுத்தும். ஆகவே, லேசான பயிற்சிகளை செய்யவும். பயிற்சி செய்து வியர்வையை துடைத்து ஆசுவாசப்படுத்திய பிறகு குளிக்கச் செல்லலாம். அதுவும் குளுமையான நீரில் குளிப்பது நல்ல பலனை தரும்.சூடான, மசாலா நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தும் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும்.மது, சிகரெட், காஃபி போன்ற பழக்கங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக வெப்பம் கொண்ட சமயத்தில் கடுமையான வேலைகளை செய்வது மயக்கம், ஸ்டிரோக் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுகுறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.