வாஷிங் மெஷினில் துணிகளோடு சேர்த்து குழந்தை துவைக்கப்பட்ட சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
டெல்லி மாநிலம் வசந்த்கன்ஞ் பகுதியில் சோப்பு தண்ணீர் நிரம்பிய டாப்-லோட் வாஷிங் மெஷினில் குழந்தை ஒன்று தவறுதலாக விழுந்துள்ளது. குழந்தை நாற்காலியில் ஏறி வாஷிங் மெஷினில் தவறி விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வீடு முழுவதும் தேடிய பிறகு, குழந்தை சோப்பு தண்ணீர் நிரம்பிய வாஷிங் மெஷினுக்குள் மயங்கிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக மீட்டு டெல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மயங்கிய நிலையில் கிட்டத்தட்ட 7 நாட்கள் கோமாவில் இருந்த குழந்தை, பல உயர்தர சிகிச்சைகளுக்கு பிறகு முழுமையாக குணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது, குழந்தை சுயநினைவின்றி, குளிர்ச்சியாக, சுவாசிப்பதில் சிரமத்துடன் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அத்துடன், சோப்பு தண்ணீரால் குழந்தையின் பல உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்ததாக குழந்தையை கவனித்து வந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைக்கு தேவையான ஆன்டி-பயாடிக்குகள், IV ஃப்ளூயிட் சப்போர்ட் ஆகியவை கொடுக்கப்பட்டு மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.