நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவுக்கு உட்பட்ட ஆனைகுன்றம் கிராமத்தில் கிராம உதவியாளராக முனுசாமி என்பவர் பணியாற்றி வந்த நிலையில், அவர் கடந்த 2001ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மகன் ராஜகிரி, கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இதை விசாரித்த ஐகோர்ட், 3 மாதங்களில் ராஜகிரிக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க 2023ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி 2024இல் ராஜகிரி அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் சட்டப்பூர்வ நோட்டீஸ் பிறப்பித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆஜராகவில்லை. இதனால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக் கூடிய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.