மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி விரைவில் உயர்த்தப்பட இருக்கிறது. இம்முறை 3 சதவீதம் உயர்த்தப்பட்டு, 45 சதவீதமாக உயரும். அது ஜூலை மாதம் முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசின் 1 கோடிக்கு மேற்பட்ட ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள்.
விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ஒவ்வொரு ஆண்டும் இருமுறை உயர்த்தி வருகிறது. அந்த வகையில், கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியது. இதனால், அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்ந்தது. இது கடந்த ஜனவரி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்த உள்ளது. இந்த முறை 3 சதவீதம் உயர்த்தப்பட்டு, அகவிலைப்படி 45 சதவீதமாக உயரும். அது ஜூலை மாதம் முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
மத்திய தொழிலாளர் அமைச்சகம் ஒவ்வொரு மாதமும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டை வெளியிட்டு வருகிறது. இந்த குறியீட்டை அடிப்படையாக கொண்டு, அகவிலைப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை, அகவிலைப்படியை உயர்த்துவது தொடர்பான வரைவை உருவாக்கி, அதை மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்வது வழக்கம்.
அகவிலைப்படி உயர்வு குறித்து அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், ”நடப்பாண்டு ஜூன் மாதத்துக்கான தொழில் துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த ஜூலை 31ஆம் தேதி வெளியானது. இந்த குறியீட்டின் அடிப்படையில், மத்திய அரசு அகவிலைப்படியை கணக்கிடுகிறது. தற்போதைய விலைவாசி சூழலில் அகவிலைப்படியை 4% உயர்த்துமாறு கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், 3% மட்டுமே உயர்த்தப்படும் என தெரிகிறது” என்றார்.