விடுமுறை விவகாரத்தில் 987 தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், போராட்டக்காரர்கள் அந்த பள்ளியை சூறையாடினர். இதற்கு கண்டனம் தெரிவித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அதுவரை பள்ளிகள் இயங்காது என்றும் கடந்த 17ஆம் தேதி அறிவித்தது. இதற்கு கல்வித்துறை, சட்ட விதிகளை மீறி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. அந்த எச்சரிக்கையையும் மீறி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது.
அதன்படி, தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்த இந்த வேலைநிறுத்தத்தில், மாநிலம் முழுவதும் 987 தனியார் பள்ளிகள் பங்கேற்றன. இதனையடுத்து, அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அளித்தது ஏன்? என்று 987 தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், தனியார் பள்ளிகள் அனுமதியின்றி விடுமுறை அறிவித்த விவகாரத்தில் 987 தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் 18ஆம் தேதி விடுப்பு அறிவித்ததற்கு பதிலாக ஏதேனும் ஒரு சனிக்கிழமையை வேலை நாளாகக் கொண்டு செயல்படுவோம் என்று பள்ளிகள் விளக்கம் அளித்துள்ளதாகவும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.