மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழா, பெரிய கோவில் வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. அதன்படி வருகிற 2ஆம் தேதி மங்கள இசையுடன் விழா தொடங்கி கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, இன்று (நவ.3) பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம், ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இன்று (நவ.3) தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037ஆவது சதய விழா வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில், சதய விழா நாளான 3ஆம் தேதி (வியாழக்கிழமை) தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினத்துக்கு பதிலாக வருகிற 12ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.