நாளை ஜனவரி 28ஆம் தேதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திமுக – காங்கிரஸ் இடையே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மாநில தேர்தல் ஆணையங்கள் தங்கள் பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக, தேர்தலுக்கான உத்தேச தேதியாக ஏப்ரல் 16ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது.
இந்தாண்டும், அதேபோல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு, இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே சென்னையில் நாளை முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர், காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். கூட்டணிக் கட்சிகளில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தையை தொடங்குகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், இம்முறை அதற்கும் குறைவாகவே தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.