இஸ்ரேலில் இருந்து 49 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”இஸ்ரேல் போர் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் ஆணைக்கினங்க தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 128 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. இவர்களில் முதற்கட்டமாக டெல்லி வந்த 21 தமிழர்கள் அவர்களது இல்லம் வரை, அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று மதுரை, திண்டுக்கல், கரூர், தென்காசி, தருமபுரி, திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சி, சென்னை, விழுப்புரம், திருப்பத்தூர், சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 28 தமிழர்கள் இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானத்தில் இன்று காலை 6 மணிக்கு டெல்லி வந்தடைந்தனர்.
டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்களை வரவேற்று அவர்களுக்கு காலை உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அரசு செலவில் விமான பயண சீட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களில் 16 தமிழர்கள் சென்னை விமான நிலையத்திற்கும், 12 தமிழர்கள் கோவை விமான நிலையத்திற்கும் வந்தடைந்தனர். மேலும், அரசின் தரப்பில் அவர்கள் சொந்த மாவட்டங்கள் செல்ல வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.