தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்த சூழலில் கால்நடைகளை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய முறைகளை கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்டுள்ளது. கால்நடைகளுக்கு உயர் வெப்பத்தால் ஏற்படும் அயற்சி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகமாக உமிழ்நீர் வடிதல், அதிகமாக தண்ணீர் பருகுதல், பகலில் குறைவாக தீவனம் உட்கொள்ளுதல், நிழலில் தஞ்சம் புகுதல், வாயைத் திறந்த நிலையில் வேகமாக சுவாசித்தல் போன்றவை வெப்ப அயற்சியின் அறிகுறிகளாகும்.
கால்நடைகள் பராமரிப்பு
* வெப்ப அயற்சியில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க கால்நடைகளை காலை மற்றும் மாலை நேரங்களில் வெயிலுக்கு முன்பும், பின்பும் மேய்ச்சலுக்கு விட வேண்டும்.
* காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மேய்ச்சலுக்கு விடுவதைத் தவிர்க்க வேண்டும். கறவை மாடுகளுக்கு ஒருநாளைக்கு 4 முதல் 5 முறையாவது உகந்த தண்ணீர் கொடுக்க வேண்டும்.
* எப்பொழுதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் தண்ணீர் தொட்டியை அமைக்க வேண்டும்.
* தண்ணீரின் மீது கலப்பு தீவனத்தை சிறிதளவு தூவும்போது கால்நடைகள் அதிக தண்ணீர் குடிக்க வாய்ப்புள்ளது.
* தாது உப்புக்கலவை, வைட்டமின்கள் கொடுப்பதன் மூலம் வெப்ப அயற்சி அறிகுறிகள் குறைவதுடன் உற்பத்தியும் குறையாமல் இருக்கும்.
* கொட்டகைகளில் நீர் தெளிப்பான்கள், மின்விசிறிகள் அமைப்பதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.
ஆடு பராமரிப்பு
* ஆடுகளுக்கு ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 12 லிட்டர் சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும்.
* பொதுவாக கொடுக்காபுல், வாகை, சேம்பு, கருவேல், சூபாபுல், மா, பலா, ஆல், அகத்தி போன்ற மரங்களின் இலைகள் ஆடுகளுக்கு சிறந்த உணவாகும்.
* ஆடுகளுக்கு புரதச்சத்து மிகுந்த வெல்வேல், கருவேல் உலர் காய்களை உணவாக கொடுக்கலாம்.
கோழி பராமரிப்பு
* கோழிகளுக்கு விடியற்காலை பொழுதிலும், இரவிலும் தீவனம் கொடுக்க வேண்டும்.
* சுத்தமான குளிர்ந்த குடிநீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குடிநீரில் வைட்டமின்கள் பி.காம்ப்ளெக்ஸ், குளுக்கோஸ் கலந்து கொடுக்கலாம்.
* அதிக இடவசதி உள்ள இடத்தில் உயரமான கூரை அமைத்து கோழிகளைப் பராமரிக்கலாம்.
* செல்லப்பிராணிகளை காரில் உள்பகுதியில் அடைத்து வைப்பதையும், நேரடியாக வெயில் படுமாறும் விடக்கூடாது.
தமிழ்நாடு முழுவதும் கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளில் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள், தாது உப்புக்கலவைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுமாயின் 1962 ஆம்புலன்ஸ் ஊர்திகள் மூலம் மருத்துவ உதவி பெற்றுக் கொள்ளலாம்.