சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்வதற்கான பேருந்து பயண டோக்கன்கள் 21ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையில், டோக்கன்கள் டிசம்பர் வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. தற்போது, அடுத்த அரையாண்டில் ஜூன் 2023 வரை பயன்படுத்தக்கூடிய டோக்கன் வழங்கப்பட இருக்கிறது.

ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை 40 மையங்களில் வரும் 21ஆம் தேதி முதல் 31 ஜனவரி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும் என்றும் அதன் பின்னர், பிப்ரவரி 1ஆம் முதல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதிதாக பெறுவதற்கு குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது கல்வி சான்றிதழ் அல்லது வாக்காளர் அடையாள அட்டையின் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்த்திட ஏதுவாக அவற்றின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும். மேலும், புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது முந்தைய கட்டணமில்லா பயண அடையாள அட்டையுடன் தற்போதைய பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படம் மட்டும் கொண்டு வர வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.