மனித கழிவுகளை நவீன ரோபோக்கள் மூலம் அகற்றும் திட்டத்தை முதன்முறையாக கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூரில் இந்த திட்டத்தை அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டீன் தொடங்கி வைத்தார். இந்த ரோபோவிற்கு பண்டிகூட் என பெயரிடப்பட்டுள்ளது. மனிதர்களை போன்றே கைகள், மூட்டு பகுதிகளை கொண்ட இந்த ரோபோ வாட்டர் ப்ரூஃப், பயர் ப்ரூஃப் தன்மை கொண்டது. மேலும், ஏதேனும் விஷ வாயு இருந்தால் அதை கண்டறிய இதில் கேமரா மற்றும் சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன என்றும் தொழில்நுட்ப வசதிகள் மூலம் கழிவுகளை நீக்கி இந்த திட்டத்தை 100 நாள் செயல்திட்டமாக நடைமுறைப்படுத்த போவதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக மனித கழிவுகளை ரோபோக்கள் மூலம் அகற்றும் திட்டத்தை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கழிவு நீர் தொட்டிகளில் இறங்கி தூய்மை செய்யும் பணியாளர்கள் சில சமயங்களில் விஷ வாயு தாக்கி உயிரிழக்கின்றனர். தெருவோரம் உள்ளிட்ட பகுதிகளில் கிடக்கும் மனிதக் கழிவுகளை தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்கின்றனர். இந்த நடைமுறைக்கு தடை விதித்து மாற்று முறையை கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்தநிலையில் மனித கழிவுகளை அகற்றும் வகையில் புதிய முயற்சியாக கேரள அரசு நவீன ரோப்போக்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 2017 தொடங்கி கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கழிவு நீர் தொட்டியில் இறங்கி பணி செய்யும் போது 352 தூய்மை பணியாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.