பருவமழை காரணமாக நாடு முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சில மாநிலங்களில் ரூ.200-க்கு கூட தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும், இந்த விலை உயர்வால் தக்காளிக்கே போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என பலரும் கிண்டல் அடித்து வரும் நிலையில், பல இடங்களில் தக்காளி திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஒரு கடையில் தக்காளி கடைக்கு ஜிம் பாய்ஸை வைத்து பாதுகாப்பு கொடுத்த சம்பவமும் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது தக்காளியை பாதுகாத்து வந்த பாதுகாவலர் ஒருவர் தக்காளியை திருட வந்தவர்களால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ரைய்ச்சூர் மாவட்டம் மாண்வி பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சந்தையில் வைக்கப்பட்டிருந்த தக்காளிக்கு ரஃபி என்பவர் நகராட்சி சார்பில் பாதுகாவலராக பணியமர்த்தப்பட்டுள்ளார். அங்கு இரவு பணியில் இருந்தபோது அங்கு தக்காளியை திருட வந்த மர்மநபர் ஒருவர் பாதுகாப்பு இருந்த ரஃபியை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தக்காளியோடு தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து ரஃபி மாண்வி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தக்காளி பாதுகாவலரை கத்தியால் குத்திய மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கத்திக்குத்தில் காயம் அடைந்த ரஃபி அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.