போதைக்கு அடிமையான கணவன் தனது மனைவியை சூதாட்டத்தில் பணயம் வைத்து இழந்த பகீர் சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே அகமதுநகர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவன் மீது அதிர்ச்சி தரும் புகார் ஒன்றை தந்துள்ளார். அவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகியுள்ளது. கணவன் மதுபோதைக்கு அடிமையானதோடு, தினமும் சூதாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், இவரது கணவன் சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அவர் கூறிய வார்த்தைகள் தான் மனைவியை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அன்றைய தினம் அந்த போதை நபர் தனது நண்பர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சூது விளையாட்டில் ஒரு கட்டத்தில் தனது மனைவியை பணயம் வைத்து விளையாடி தோற்றுள்ளார். அதன்பிறகு வீட்டிற்கு வந்த அவர், தனது நண்பருடன் உறவு கொள்ளுமாறு மனைவிக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளார். “சூதாட்டத்தில் எனது நண்பரிடம் உன்னை இழந்துவிட்டேன். எனது நண்பர் உன்னை அழைத்துச் செல்வார். நீ உடன் செல்ல வேண்டும்” என்று கூறவே மனைவி அதிர்ச்சியில் உறைந்துள்ளார். நான் செல்ல முடியாது என மறுக்கவே அவரை கணவன் தாக்கியுள்ளார்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த பெண் அருகேயுள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். பெண்ணின் புகாரை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை ஆசுவாசப்படுத்தி உரிய விசாரணை நடத்துகிறோம் என உறுதி அளித்துள்ளனர். இந்நிலையில், தலைமறைவான கணவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.