`ஆண் அளவுக்கு அதிகமாக மது அருந்துவது, மனைவியை மனரீதியாக கொடுமைப்படுத்துவதற்குச் சமம்’ என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு ராய்கரில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், ”தனது கணவர் சம்பாதிப்பதில்லை. அவரது குடிப்பழக்கத்தால் குடும்பத்தின் நிலை மோசமடைந்தது. குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தவும் அவர் மறுத்துவிட்டார். இதுகுறித்து கேட்டபோது என்னை மிரட்டினார். இதனால் எனக்கு விவாகரத்து வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், இந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் மேல்முறையீடு செய்தார். மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ”கடந்த 2006 பிப்ரவரி 2ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, வீட்டில் உள்ள பொருட்களையும் விற்க ஆரம்பித்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
2016 மே 26ஆம் தேதி குடிபோதையில் இருந்தவர், உடல் ரீதியாக தன் மனைவியைத் துன்புறுத்தத் தொடங்கியுள்ளார். இதனால், தனது 2 குழந்தைகளுடன் அப்பெண் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம், ”மனைவி தனது வீட்டுத் தேவைகளுக்காகவும், குழந்தைகளுக்கு நல்ல கல்வி மற்றும் வாழ்க்கையை வழங்குவதற்காகவும் கணவனைச் சார்ந்திருப்பது மிகவும் இயல்பானது.
அந்த நபர் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாகக் குடிப்பழக்கத்திற்கு அடிமையானால், அது குடும்பத்தின் நிலையை மோசமாக்கும். இது மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட முழு குடும்பத்திற்கும் மனரீதியான கொடுமைக்கு வழிவகுக்கிறது” என்று கூறி அப்பெண்ணுக்கு ஆதரவாக விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது.