கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வாலிபரின் நண்பரும், மாணவியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால் மூவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிக்கொள்வது வழக்கம். அதன்படி, கடந்த 18ஆம் தேதி அந்த மாணவியை தனது வீட்டுக்கு வருமாறு வாலிபர் அழைத்துள்ளார். வீட்டில் சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் சென்று விடலாம் என்று மாணவியிடம் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த மாணவியும் அன்று மாலை வாலிபரின் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டில் வாலிபரின் நண்பரும் இருந்தார். அவரை மாணவிக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அவருடனும் மாணவி பேசியுள்ளார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த வாலிபர்கள், பின்னர் மது அருந்த தொடங்கியுள்ளனர். இதையடுத்து, மாணவியையும் மது குடிக்குமாறு கூறியுள்ளனர். முதலில் மது குடிக்க மறுத்த மாணவி, பின்னர் நண்பரின் வற்புறுத்தலால் சிறிது மது குடித்தார். இதில், போதை தலைக்கேறியதால் மாணவி மயங்கியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொண்ட வாலிபர்கள் இருவரும், அந்த மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அன்று இரவு முழுவதும் மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவியை மறுநாள் காலையில் எர்ணாகுளம் பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு வாலிபர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து மாணவி, தனது தோழி ஒருவரிடம் கூறி அழுதுள்ளார். பின்னர், கல்லூரிக்கு சென்ற மாணவி மன உளைச்சலுடன் காணப்பட்டார். எனவே கல்லூரி ஆசிரியைகள், மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். அப்போதுதான் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி மாணவி ஆசிரியைகளிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த இரண்டு வாலிபர்களையும் தேடி வந்தனர். மேலும், அவர்களின் செல்போன் எண்களை கொண்டு பதுங்கி இருந்த இடத்தையும் கண்டுபிடித்தனர். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிப்பட்ட இருவரும் இதுபோல வேறு யாரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.