தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு முதலமைச்சர் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தான் பிரதமரிடம் வலியுறுத்தினேன். இதனை பாஜக தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துவார் என எதிர்பார்க்கவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திலுள்ள ஊராட்சி முகமை அலுவலகத்தில்
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,
சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் மஸ்தான் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “திராவிடம் என்ற வார்த்தை 1800களில் தோன்றியதாக அண்ணாமலை கூறுகிறார். ஆனால், திராவிட மாடல் என்பது திராவிட இயக்கமல்ல. சிந்து சமவெளி நாகரிகம் தோன்றியபோதே தோன்றியது. அதனை வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார். அவர் தமிழக முதலமைச்சர் கல்வியை உயர்த்துவதற்கு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தான் பிரதமரிடம்
வலியுறுத்தினேன்.
![’அண்ணாமலை கொச்சைப்படுத்துவார் என எதிர்பார்க்கவில்லை’..! அமைச்சர் பொன்முடி](https://1newsnation.com/wp-content/uploads/2022/01/Ponmudi-1024x639.jpg)
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை என்று கூறுகிறது. தமிழ்நாட்டிற்கு என்று கல்விக் கொள்கை வளர்ப்பதற்கு தமிழக முதலமைச்சர் ஒரு குழுவை நியமித்து கொள்கையை உருவாக்க வேண்டும் என்று செயல்பட்டு கொண்டுள்ளார். அதற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டுமென்று பிரதமரிடம் வலியுறுத்தினேன். தமிழ்நாட்டில் உயர்கல்வி என்பது உயர்திருக்கிறது. தரத்தை உயர்த்த வேண்டும்
என்பதால் ’நான் முதல்வன்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திராவிடம் வந்த பிறகுதான் எல்லாம் வந்ததாக கூறுகிறாரே அண்ணாமலை. அந்த காலத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் கல்வி அறிவு பெற முடியாமல் பள்ளிக்குள்ளே நுழைய முடியவில்லை. படிப்பதற்கு வாய்ப்பு இல்லாமலும் ஒரு சமுதாயத்தினர் மட்டுமே கல்வி அறிவு பெற்றனர். அனைத்து சமுதாயத்தினரும் ஆண்களும் பெண்களும் கல்வி அறிவு பெற வேண்டுமென்பது தான் திராவிடம் மாடல்.
![’அண்ணாமலை கொச்சைப்படுத்துவார் என எதிர்பார்க்கவில்லை’..! அமைச்சர் பொன்முடி](https://1newsnation.com/wp-content/uploads/2022/05/Annamalai-1024x576.jpg)
பிரதமரிடம் நிதி அளிக்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை. முதலமைச்சர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தான் அன்பாக கேட்டுக் கொண்டேன்.
அதனையும் அவர் ஏற்றுக் கொண்டார். மத்திய அரசு நான்காண்டுகளில் உயர்கல்விக்கு ரூ.6,664 கோடி தமிழக வழங்கியதாக கூறுகிறார். தமிழக அரசு மட்டும் ஒரு ஆண்டில் உயர் கல்விக்கு செலவு செய்த தொகை 5 ஆயிரத்து 666 கோடி. இதுபோன்று கல்விக்கு அதிகளவு செலவு செய்து வருகிறோம். மொழிக் கொள்கைகளைப் பற்றியும், சுதந்திரமாக செயல்பட விடுங்கள் என்று தான் கேட்கிறேன். பிரதமரிடம் நிதி உதவி கேட்கவில்லை. இதனை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும். அடித்தட்டு மக்களுக்கும் பயன்பெற வேண்டும் என்று உழைப்பது தான் இந்த இயக்கம். திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு தமிழகத்தில்தான் 53 சதவீதம் பேர் உயர்கல்வி பெற்றுள்ளனர். இதனை அண்ணாமலை கொச்சைப்படுத்துவார் என எதிர்பார்க்கவில்லை. முருகனைப் போன்று பெரிய பதவிகளுக்கு அவரும் ஆசைப்படலாம்” என தெரிவித்தார்.