திருப்பூரில் திருட சென்ற இடத்தில் தூக்கில் தொங்க முயற்சித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் திம்மநாயக்கன் பாளையம், சிவசக்தி நகரை சேர்ந்தவர் வடிவேலு. இவர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், வீட்டிற்குள் திருடன் இருப்பதை அறிந்துக்கொண்ட அவர், வீட்டின் கதவை பூட்டிவிட்டு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
இந்நிலையில், செய்வதறியாது திகைத்த திருடன் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், வீட்டில் இருந்த புடவையை எடுக்கு தூக்கில் தொங்க முயற்சித்துள்ளார். அதற்குள் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரை மீட்டு விசாரணை நடத்தியதில், அவர் திருப்பூர் பழவஞ்சி பாளையத்தைச் சேர்ந்த இஸ்மாயில் என்பது தெரியவந்ததுள்ளது. பனியன் கம்பெனி தொழிலாளியான இவர் குடும்ப வறுமை காரணமாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த இஸ்மாயில், தான் இதுவரை 3 இடங்களில் திருட முயற்சி செய்ததாகவும், 3 இடங்களிலும் பிடிபட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு திருடக் கூட தெரியவில்லை என்றும் அதனால் தான் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.