உத்தரப்பிரதேச மாநிலம் சவுசாமி மாவட்டம் பிப்ரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட செர்ப்பூரி ல் கடந்த 29ஆம் தேதி ஒரு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்த நிலையில், மணமகனுக்கு மாலை அணிவிக்க மணமகள் திருமண மேடைக்கு வரும் வரை எல்லாம் நல்லபடியாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், மணமகனுக்கு மாலை அணிவிக்க மணமகள் திருமண மேடையை அடைந்து மாப்பிள்ளையை பார்த்தவுடன் மாலையை அணிவிக்க மறுத்துவிட்டார். திடீரென மணப்பெண் மாப்பிள்ளையை நிராகரித்தது அவரது குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து மணமகளிடம் கேட்டபோது, இவ்வளவு கறுப்பான இளைஞரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என பதில் அளித்துள்ளார். மேலும், மாப்பிள்ளைக்கு வயதாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பலர் மணமகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர் மனதை மாற்ற முயற்சி செய்தும் அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. இதனையடுத்து, பஞ்சாயத்து கூட்டப்பட்டு மணமகளை மீண்டும் சமாதானப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், மணமகள் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்துள்ளார். கடைசியாக மணமகன் தரப்பு மண்டபத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மணமகளின் இந்த முடிவு குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்தது. சிலர் அவள் செய்தது சரி எனவும் சில தவறு எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.