தமிழக பாஜகவில் 10 முதல் 15 பேர் முதலமைச்சர் நாற்காலிக்கு பொருத்தமானவர்கள் என்றும் தனக்கு முதல்வர் கனவெல்லாம் கிடையாது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனது வேலையெல்லாம் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க வேண்டும், கட்சியில் நிறைய தலைவர்களை உருவாக்க வேண்டும். துக்ளக் விழாவில் அண்ணாமலை பற்றி ரஜினிகாந்த் சொன்ன ரகசியத்தை ஆடிட்டர் குருமூர்த்தி உடைத்து பேசிய நிலையில், அது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
பதவி ஆசையில் இருப்பவர்கள் பாஜகவை பார்த்து குற்றஞ்சாட்ட எந்த தகுதியும் இல்லாதவர்கள். பாஜகவில் யாருக்கும் பதவி ஆசை கிடையாது. தங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் கொள்கைக்காவும், மாற்றத்துக்காகவும் தான் இருக்கிறார்களே தவிர வேறு எதற்காகவும் இல்லை. தமிழக பாஜகவை பொறுத்தவரை தன்னைக்காட்டிலும் முதலமைச்சர் நாற்காலிக்கு 10 முதல் 15 பேர் பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள்.
திமுகவில் ”இவரை தவிர வேறு யாராவது ஒருவரை முதலமைச்சர் நாற்காலிக்கு பொருத்தமானவர் எனச் சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம்” என எதிர்கேள்வியும் எழுப்பினார். பாஜகவில் தாம் சிங்கிள் லீடர் கிடையாது. தன்னைப் போலவே பல தலைவர்கள் இருக்கின்றனர். மற்ற அரசியல் கட்சிகளுக்கும், பாஜகவுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் பாஜகவில் மட்டும் தான் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். மற்றக் கட்சிகளில் எல்லாம் ஒருவரை மட்டும் உட்கார வைத்துவிட்டு மற்றவர்கள் எல்லாம் அவரை சுற்றிச் சுற்றி வருகிறார்கள். ஆனால், பாஜகவில் அப்படியில்லை” என்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது பேசினார்.