கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் அஜித்ராம் பிரதீப் (33). இவர், சென்னையில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அஜித்ராம் பிரதீப்புக்கும் கட்டையன்விளையை சேர்ந்த 28 வயதான சுவிதா என்ற பெண்ணுக்கு கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது சீர்வரிசை பொருட்களுடன் 92 சவரன் நகைகளை வரதட்சணையாக அஜித்ராம் வீட்டார் பெற்றதாக கூறப்படுகிறது. அஜித்ராமுக்கு கடன் பிரச்சனை இருந்ததால், அதனை சரிகட்ட திருமணமான 6-வது நாளிலேயே மனைவியிடம் பணம் வாங்கிவர கூறியதாகவும், இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
சம்பவத்தன்று சுவிதாவிடம் மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்த பிரதீப், உனது தந்தையின் வீட்டு பத்திரத்தை தனது பெயருக்கு மாற்றி தர வேண்டும்.. இல்லாவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி தாக்கியுள்ளார். இதில், காயம் அடைந்த சுவிதா தனது தந்தைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அவர் விரைந்து சென்று தனது மகளை மீட்டு, சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் சேர்த்தார். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசில் சுவிதா புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார் பிரதீப் மீது, வரதட்சணை கொடுமை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், திருமணத்துக்கு 5 நாட்களுக்கு முன்பு தாய் உயிரிழந்ததால் பரிதவித்த சுவிதா, நிச்சயத்த படி ஐந்தாவது நாள் பிரதீப்பை திருமணம் செய்து கொண்டுள்ளார். இரண்டரை மாதத்திற்குள் 10-க்கும் மேற்பட்ட முறை பிரதீப் தன்னை தாக்கியதாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்த பின்னரும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் சுவிதா வேதனை தெரிவித்தார். வரதட்சணையாக வழங்கப்பட்ட 95 சவரன் நகைகளில் 27 சவரன் நகைகளை பறித்துச் சென்ற பிரதீப் அதனை அடகு வைத்தாரா ? அல்லது விற்பனை செய்தாரா ? என்பது தெரியவில்லை என்றும் சுவிதா தெரிவித்துள்ளார்.