மதம் மாறிய ஆதிதிராவிடர்கள், மதம் மாறிய பிறகு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் வத்திருந்தால் அது செல்லாது என்று தேசிய ஆதிதிராவிடர் கமிஷன் துணைத்தலைவர் அருண் ஹல்தார் தெரிவித்தார். இதுகுறித்து, தேசிய ஆதிதிராவிடர் கமிஷன் துணைத்தலைவர் அருண் ஹல்தார் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
தேசிய ஆதிதிராவிடர் கமிஷனுக்கு கடந்த ஒன்றரை வருடத்தில் தமிழகத்தில் இருந்து 200 புகார்கள் வந்துள்ளன. இதில், 100 வழக்குகள் மீது விசாரணை நடந்து வருகிறது. இவற்றில் 60 வழக்குகளுக்கு தீர்வு எட்டியது. மேலும் ஆதிதிராவிடர் மக்களின் மீது நிகழும் வன்முறைகளில் ராஜஸ்தான் மாநிலம் முதல் இடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. தமிழகத்தில் பல இடங்களில் இன்னமும் ஆதிதிராவிட மக்கள் சுடுகாடு செல்வதற்கு தனிபாதை இருக்கிறது. இத்தகைய நிலை கண்டிக்கத்தக்கது.
இதுதொடர்பாக சமீபத்தில் வந்த புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைவருக்கும் ஒரே பாதை அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இதுபற்றிய விழிப்புணர்வை அரசு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இந்நிலையில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக ஆதிதிராவிடர் வகுப்பில் இருந்து வெளியேறுகின்றனர். எனவே, மதம் மாறிய பிறகும், அவர்கள் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் வைத்திருந்தால், அது செல்லாது.
வேறு மதத்திற்கு மாறியவர்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ். இது பற்றியும் தொடர்ந்து பல புகார்கள் ஆணையத்திற்கு வருகிறது. போலி சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சான்றிதழை சரிபார்த்து வழங்க மாவட்ட அளவில் குழு அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.