கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட நிலையில், கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நீட்டை கொண்டு வந்ததே திமுகவும் காங்கிரசும் தான். ஆனால், இப்போது நாடகமாடுகிறார்கள் என்று விமர்சித்தார்.
திமுக ஒப்புதல் இல்லாமலே நீட்டை கொண்டு வந்திருக்க முடியுமா? இதற்கு முதலில் உதயநிதி பதில் சொல்லட்டும். செங்கல்லைத் தூக்குவது, முட்டையைத் தூக்குவதை எல்லாம் மக்களை அவர் ஏமாற்றவே செய்து வருகிறார். நமது நாட்டில் அனைத்து வேலை செய்வோருக்கும் தேர்வுகள் இருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களுக்கு எதாவது தேர்வு இருக்கிறதா? எந்தவொரு தகுதியும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்ற சூழல் இருந்தால் எப்படிச் சரியாக இருக்கும்.
மின் கட்டணத்தைத் தாறுமாறாக உயர்த்தி இருக்கிறார்கள். இதனால் வறுமையில் இருக்கும் மக்களுக்கும் கூட ஆயிரக்கணக்கில் மின் கட்டணம் வருகிறது. இதையெல்லாம் எப்படி ஏற்க முடியும். இது குறித்து நான் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறேன். ஆனால் ஒருவரிடமும் பதில் இல்லை.
மோடி மோடி எனப் பூச்சாண்டி காட்டி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. மோடி இல்லை என்றால் திமுகவால் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. இதனால் திமுக தான் மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால், நீட்டை ஒழிக்க இவர்கள் எதையும் செய்யவில்லை. போராட்டம் கூட நடத்தவில்லை. இப்போது தேர்தல் நெருங்கும் நிலையில், மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது தேர்தல் நாடகம் அவ்வளவுதான்.
பாஜகவால் அடுத்து வரும் லோக்சபா தேர்தலில் அண்ணன் பொன்.ராதாகிருஷ்ணன், தம்பி அண்ணாமலை, தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரில் ஒருவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா? அப்படி அறிவித்தால் கொள்கை கோட்பாடுகளைத் தூக்கி எறிந்து விட்டு, நாங்களே ஆதரிப்போம். தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை. தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று நாங்களே ஆதரிப்போம். உண்மையில் பாஜகவுக்குத் தமிழ்நாட்டின் மீதும் தமிழர்கள் மீதும் அக்கறை இல்லை” என்று பேசினார்.