உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி போதாது என்றால் தொகையை மேலும் அதிகரிக்க தயார் என அயோத்தி சாமியார் கூறியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், அயோத்தியை சேர்ந்த பரகாம்ச ஆச்சார்யா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்திருக்கிறார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அயோத்தி சாமியாரின் மிரட்டலுக்கு மிகவும் கூலாக பதில் அளித்திருந்தார். அவர் கூறுகையில், ”எனது தலையை சீவ ரூ. 10 கோடி எதற்கு..? 10 ரூபாய் சீப்பு போதுமே” என்றும் தெரிவித்துள்ளார். இந்த பேச்சு பட்டி தொட்டி எல்லாம் பரவ, மீண்டும் அயோத்தி சாமியார் கடுப்பாகி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அதாவது, உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி போதாது என்றால் தொகையை மேலும் அதிகரிக்க தயார் என்றும், நாட்டில் உள்ள 100 கோடி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், சனாதன தர்மத்தை இழிவுப்படுத்துவதை சகித்து கொள்ள முடியாது என்றும் சனாதன தர்மத்தால் தான் நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.