இனியும் பிரிந்து செயல்பட்டால் கட்சி வீழ்ச்சியடையும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.. எனினும் பொதுக்குழுவில் அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அக்கட்சியில் உட்கட்சி மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. பழனிசாமியை எதிர்த்து, பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்குகளில் இறுதி தீர்ப்பு வராவிட்டாலும், இடைக்கால தீர்ப்புகள் பழனிசாமிக்கு சாதகமாகவே வந்துள்ளன

ஆனாலும் பழனிசாமி மகிழ்ச்சி அடைய முடியாத அளவுக்கு அவர் மீதும் வேலுமணி, விஜயபாஸ்கர் போன்ற முன்னாள் அமைச்சர்கள் மீதும் பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை மட்டுமல்லாது மத்திய அரசின் வருமான வரித் துறை, அமலாக்கத் துறையும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பலரது வீடுகள் அலுவலகங்களில் சோதனை நடத்தியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்புக்கு பின் பேட்டியளித்த பழனிசாமி, ‘அமித்ஷாவுடன் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்று கூறினார்.. மேலும், கோதாவரி – காவரி இணைப்பு திட்டம் போன்ற தமிழகத்தின் நலன் சார்ந்த சில கோரிக்கைகளை முன்வைத்தாகவும், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவது பற்றி, அவரது கவனத்திற்கு கொண்டுச் சென்றதாகவும் தெரிவித்தார்..
ஆனாலும், இந்த சந்திப்பில் 90 சதவீதம் அரசியல் பேசபட்டதாக பாஜகவினர் கூறுகின்றனர்.. பாஜக தலைவர் ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது தொகுதி பங்கீடு தொடர்பாக பழனிசாமியிடம் தான் அமித்ஷா பேசினார். கடைசியாக 2004-ல் கூட்டணியில் இருந்தபோது, பா.ஜ.,வுக்கு ஜெயலலிதா ஏழு தொகுதிகளை ஒதுக்கினார். அதுபோல ஏழு தொகுதிகள் வேண்டும் என, அமித்ஷா கேட்டார். ஆனால் ஏதேதோ காரணம் கூறி கடைசியில் ஐந்து தொகுதிகளை மட்டுமே ஒதுக்கினார். அதுபோல, அமித்ஷா தலைமையில் கூட்டணியை அறிவிக்கவும் மறுத்து பழனிசாமியே அனைத்தையும் செய்தார். இதனால் அவரை பற்றி அமித்ஷாவுக்கு நன்கு தெரியும்.
வரும் 2024 மக்களவை தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி வென்றால் தமிழகத்தில் நீங்கள் அரசியலே செய்ய முடியாது. எனவே, 2024-ல் குறைந்தது 25 இடங்களிலாவது வெற்றி பெற திட்டமிடுங்கள். அதற்கு மாறாக, கட்சி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் மட்டும் செயல்பட்டால், மேலும் பிளவு ஏற்படும்.
ஏற்கனவே, தினகரன் ஓட்டுகளை பிரித்துள்ளார். இனியும் பிரிந்து செயல்பட்டால் வீழ்வீர்கள்’ என, அமித்ஷா எச்சரித்துள்ளார்.
அனைவரையும் அரவணைத்து, அ.தி.மு.க., பிளவுபடுவதை தடுத்து, 2024-ல் பா.ம.க., – தே.மு.தி.க., புதிய தமிழகம் மற்றும் சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான கூட்டணி அமைக்க, இப்போது திட்டமிடுங்கள். 2024-ல் தி.மு.க., அதிக இடங்களை வென்றால் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் ஊழல் வழக்கில் சிறை செல்ல வேண்டி வரும். எனவே, உங்களுக்குள் அடித்து கொள்ளாமல், தி.மு.க.,வை தோற்கடிக்க வேலை செய்யுங்கள்’ என்று, அமித்ஷா எடப்பாடி பழனிசாமிக்கு அட்வைஸ் கூறினார்..” என்று தெரிவித்தார்..
வழக்கமாக செய்தியாளர்களை சந்திக்கும் போது எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக பேட்டியளிப்பார்.. ஆனால் டெல்லியில் பேட்டியளிக்கும் போது அவரின் முகத்தில் வழக்கமான உற்சாகம் தென்படவில்லை.. மேலும் அமித்ஷாவிடம் அரசியல் பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.. ஒன்றாக இணைந்து செயல்படுமாறு அமித்ஷா அறிவுறுத்தியதால் தான் எடப்பாடி பழனிசாமி குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது..
இந்த பொதுக்குழு விவகாரத்திற்கு இடையிலும் ஒன்றாக செயல்படலாம் என்று ஓபிஎஸ் கூறினார்.. ஆனால் ஒருநாளும் அவருடன் இணைந்து செயல்பட முடியாது என்று கூறிவிட்டார்.. இந்நிலையில் அமித்ஷாவும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது.. எனவே எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..