தெருவிற்கு ஒரு தொலைக்காட்சி என்று இருந்த நிலை மாறி, இன்று அனைவரது வீட்டிலும் தொலைக்காட்சி இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சிகள் இல்லாத வீடுகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வெகுஜன மக்களின் பயன்பாட்டிற்கேற்ப தொலைக்காட்சியின் சிறப்பம்சங்களும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் `ஓபன் செல்களின் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளின் விலை 10 சதவிகிதம் அதிகரிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி தயாரிக்க பயன்படும் முக்கியமான பொருள் `ஓபன் செல் பேனல்’. தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த பேனல்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றன.
அதிலும் சீனாவில் உள்ள நான்கு அல்லது ஐந்து நிறுவனங்களே இந்த முக்கிய பொருளை தயாரிக்கின்றன. அதனால் அதன் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் சீனாவிடம் தான் உள்ளது. ஓபன் செல் நிலையில் வரும் இந்த பேனல்கள் மதிப்புக் கூட்டுதல் நடவடிக்கைக்காக அசெம்பிள் செய்யப்பட்டு பின்பு மார்க்கெட்டில் விற்கப்படும். ஒட்டுமொத்த டிவி உற்பத்தி செலவில் இந்த ஓபன் செல்களின் பங்கு மட்டும் 60 முதல் 65 சதவிகிதம் இருக்கும். 2023ஆம் ஆண்டில் இருந்து ஓபன் செல்களின் விலை கணிசமாக அதிகரித்தது.
விலை உயர்வு குறித்த முடிவு உற்பத்தியாளர்களிடமே உள்ளது என்றாலும், பெரிய திரை உள்ள தொலைக்காட்சி பேனல்கள் விலை அதிகரிக்கும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 10% விலை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஓபன் செல்களின் விலை அதிகரிக்கிறது. ஓபன் செல்களுக்காக ஒரு நாட்டை மட்டும் நம்பி இருப்பதால் இந்த பிரச்சனை உள்ளது. குறிப்பிட்ட ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருப்பதால் தொலைக்காட்சி துறை திடீர் விலை உயர்வைச் சந்திக்க நேரிடுகிறது. உற்பத்தி பொருள்களின் விலை அதிகரிப்பு, பைனல் ப்ராடெக்டின் விலையை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.