மழைக்காலங்களில் மின் விபத்துகளை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. காற்றழுத்தம், புயல் காலங்களில் நிறைய மழை பெய்யும். தற்போது சாதாரண மழைக்கே பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், மழை காலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதை காட்டிலும் மின்சாரம் பாய்ந்து இறக்கும் நிகழ்வுகளே அதிகம். அதற்கு காரணம் பலத்த மழை பெய்தால் மின் வயர்கள் அறுந்து விழும் நிகழ்வு ஏற்படும். இதை அறியாமல் யாரேனும் காலை வைத்து மிதித்துவிட்டால் மின்சாரம் பாய்ந்து இறக்க நேரிடும்.
எனவே மழைக் காலங்களில் இது போன்ற விபத்துகள் ஏற்படுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
- கீழே விழுந்த மின் கம்பிகள் அல்லது கம்பங்கள் அருகில் செல்லக்கூடாது.
- அப்படி காணும் பட்சத்தில் எச்சரிக்கை அடையாளம் செய்து மின்னகம் எண் 94987 94987 என்ற எண்ணுக்கு அழைக்கவும்
- மின் கம்பம்/மின்மாற்றி/ பகிர்மான பெட்டி அருகில் வாகனங்களை நிறுத்த கூடாது.
- தரமற்ற பிவிசி வயரை கொண்டு வீட்டிலிருந்து அருகில் உள்ள கொட்டகைக்கோ அல்லது கழிவறைக்கோ கொண்டு செல்ல வேண்டாம்.
- மாடிகளில் துணி உலர வைக்கும் போது மின் கம்பி மேலேயும், அருகிலும் இல்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.