சாலைகளில் வாகன விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றுவோருக்கு 10,000 ரூபாய் வெகுமதி அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, இந்த உதவிக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வரும் 5,000 ரூபாயுடன், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக 5,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. இந்த தொகையை பெற, சாலை விபத்தில் சிக்கியவர்களை கோல்டன் ஹவர் எனப்படும் கால அளவில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, உயிரை காப்பாற்றியிருக்க வேண்டும்.
வெகுமதி பெற தகுதியானவர்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்வார்கள். வெகுமதியைப் பெற சில வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஒரே விபத்தில் பல உயிர்களை ஒருவர் காப்பாற்றியிருந்தால், அவருக்கு ரூ.5,000 வழங்கப்படும். ஒருவரின் உயிரை பலர் காப்பாற்றியிருந்தால், ரூ.5,000 பகிர்ந்தளிக்கப்படும்.
அதேபோல், ஒரே விபத்தில் பலரின் உயிரை பலர் காப்பாற்றியிருந்தால், அவர்கள் அனைவருக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படுவதோடு, பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். இத்திட்டம் 2026ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.