பெங்களூரு நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக இளைஞர் ஒருவர் பணியாற்றி வருகிறார். அவர் ஒரு பெண்ணை உயிருக்கு உயிருக்காக காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞருக்கும், அவரது காதலிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் காதலை முறித்து விட்டு அந்த இளம்பெண் பிரிந்து சென்று விட்டார். இதனால், அந்த இளைஜர் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
அப்போது, சமூக வலைதளம் மூலமாக கடந்த மாதம் ஒரு நபர் அறிமுகமாகியுள்ளார். அவர் தன்னை ஜோதிடர் என்று கூறியுள்ளார். பின்னர், இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். அவரிடம் தனது காதல் தோல்வி குறித்தும், காதலி பிரிந்து சென்றது குறித்தும் தெரிவித்திருக்கிறார் அந்த இளைஞர். உடனே அவர், தான் ஜோதிடர் என்பதால் சில பரிகார பூஜைகளை செய்தால், பிரிந்து சென்ற காதலி மீண்டும் வந்து சேர்ந்து விடுவார் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பிய இளைஞரும், அந்த ஜோதிடரிடம் பரிகார பூஜை செய்வதற்காக பணம் அனுப்பி வைத்துள்ளார். இவ்வாறு ஒவ்வொரு பூஜை செய்ய வேண்டும் என்று கூறி ரூ.46 ஆயிரம் வரை பணம் பறித்துள்ளார். ஆனால், காதலி மீண்டும் வந்து சேரவில்லை. இதனால் அவருக்கு சந்தேகம் எழுந்தது. அதே நேரத்தில் இன்னும் பெரிய பூஜை செய்ய வேண்டும், அதற்கு பணம் கொடுக்கும்படி அந்த மோசடி ஜோதிடர் கேட்டுள்ளார். ஆனால், பணம் கொடுக்க மறுத்து, ரூ.46 ஆயிரத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால், அந்த மோசடி ஜோதிடர் பணத்தை திரும்ப கொடுக்காமல் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். இதுகுறித்து அந்த இளைஞர் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த போலி ஜோதிடரை தேடி வருகின்றனர்.