வாட்ஸ் அப்பில் சில எண்களில் இருந்து போன் கால்கள் வந்தால் அதை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கிறது. நொடிக்கு நொடி புதுமைகள் புகுத்தப்படுகின்றன. அதற்கேற்றால் போல், மோசடி சம்பவங்களும் நாட்டில் அதிகரித்து வருகிறது. வீடு புகுந்து கொள்ளையடித்து, ரிஸ்க் எடுத்து வழிபறி நடத்துவதெல்லாம் அந்த காலம். இவை தற்போது தொடர்ந்தாலும் திருட்டு சம்பவங்களில் கூட ஹைடெக் புகுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், உட்கார்ந்த இடத்தில் இருந்து எப்படியெல்லாம் பணத்தை சுருட்ட முடியுமோ அப்படி சுருட்டுகிறார்கள். உங்களுக்கு இத்தனை கோடி பரிசு விழுந்திருக்கிறது. உங்கள் போன் நம்பர் அதிர்ஷ்ட எண் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதற்காக சில தொகையை செலுத்தினால், அந்த பணம் உங்களுக்கு கிடைக்கும் எனக்கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர்.
மேலும், இந்த எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் பார்ட் டைம் வேலை கிடைக்கும். நாள் ஒன்றுக்கு ரூ 20 ஆயிரம் சம்பாதிக்கலாம் என்பார்கள். இவையற்றை எல்லாம் கிளிக் செய்தால் நம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் காணாமல் போய்விடும். இவர்களை பிடிப்பதும் போலீஸாருக்கு சவாலாக இருக்கிறது. அதேபோல், ஒரு எண்ணுக்கு அழகிகள் இருப்பதாகவும், குறைந்தபட்ச கட்டணத்தில் மசாஜ் செய்வார் என்றும் தகவல் வரும். அதில் கொடுக்கப்பட்ட எண்ணிற்கு கால் செய்ய சொல்லும். அப்படி செய்தால் அங்கு ஒரு அழகி நிர்வாணமாக இருப்பார். பின்னணியில் ஒரு கும்பல் அந்த அழகியையும் போன் செய்த நபரையும் ரெக்கார்டு செய்து, உடனே கட் செய்துவிடும். பின்னர் இந்த வீடியோவை ரிலீஸ் செய்துவிடுவதாக அந்த நபரை மிரட்டி பணம் பறிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில், வாட்ஸ் ஆப்பில் வரும் புதிய மோசடி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. புகாரின் படி மக்களுக்கு சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வருகின்றன. அதாவது எத்தியோபிா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) மற்றும் பிற நாடுகளிலிருந்து வருகிறது. இந்த அழைப்புகள் வேறு நாட்டு குறியீட்டிலிருந்து வந்தாலும் அது உண்மையில் அந்த நாட்டிலிருந்து வருவது கிடையாது. உங்களுக்கு தெரியாத எந்த சர்வதேச அழைப்புகளுக்கும் பதில் அளிக்காமல் இருப்பதே சிறந்தது. இது போல் வாட்ஸ் அப் அழைப்புகளுக்கான சர்வதேச எண்களை விற்பனை செய்யும் ஏஜென்சிகள் பணியில் உள்ளன. உங்களுக்கு இந்த அழைப்புகள் நீல நிறத்தில் தோன்றும்.
இந்த காலை அட்டென்ட் செய்தால் உங்கள் தனிப்பட்ட விவரங்களை பெற்று பணத்தை திருடும் மோசடியில் ஈடுபடுவார்கள். அது போல் பகுதி நேர வேலைவாய்ப்புகள் இருப்பதாகவும் அதற்கு இந்த கட்டணத்தை செலுத்தினால், ஒரே மாதத்தில் உங்கள் ஊதியத்துடன் இந்த கட்டணமும் திரும்ப செலுத்தப்படும் என்றெல்லாம் சொல்வார்கள். எதையும் நம்பி பணம் செலுத்திவிட்டு ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.