குஜராத் மாநிலத்திற்கு உட்பட்ட வின்ச்சியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமுபாய். இவரது மனைவி ஹன்சாபென். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் தங்களது வயல் பகுதியில் குடிசை அமைத்து வசித்து வந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை இரவு தம்பதிகள் தங்களது தலையை தாங்களே வெட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். மேலும், அவர்களது வீட்டிற்குள் நரபலி சடங்கள் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணையில், தம்பதிகள் தங்களது தலையை வெட்டிக் கொள்வதற்காக வீட்டிலேயே ஒரு கருவியைத் தயார் செய்துள்ளனர். பின்னர் திட்டமிட்டபடி நெருப்பு பலிபீடம் அமைத்து, கயிற்றை இழுத்தால் தலையைத் துண்டாக வெட்டி நெருப்பில் விழும் படி தயார்படுத்தியுள்ளனர். அதன்படி கயிற்றை இழுத்து தங்களது தலையை தாங்களே வெட்டிக்கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு முன்பு தம்பதிகள் எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதில், தங்களது பெற்றோர் மற்றும் இரண்டு குழந்தைகளை உறவினர்கள் பார்த்துக் கொள்ளும்படி எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தம்பதிகள் கடந்த ஒருவருடமாகவே வீட்டிற்குள் பூஜைகள் போன்ற பல சடங்குகளைச் செய்து வந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தம்பதிகள் ஏன்? நரபலி கொடுத்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.