ஆண்டுக்கு 58 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் இளைஞர் ஒருவர், தான் எப்போதும் தனிமையாக இருப்பதாகவும் என்னுடன் நேரத்தை செலவிட காதலி இல்லை என்றும் இணையத்தில் பகிர்ந்துள்ள அவரது கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.
நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில் நம் அருகில் இருப்பவர்களுடன் பேசக் கூட நமக்கு நேரமில்லை. அல்லது அப்படி தான் நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். தனிமை, டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் போன்ற வார்த்தைகளின் பயன்பாடும் அதிகமாகிவிட்டது. அதன் அதிக பயன்பாட்டுக்கு ஏற்றவாரே அதற்கான தீர்வை காண வேண்டும் என்ற விழிப்புணர்வும் இப்போது பரவலாக இருக்கிறது. மக்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தநிலையில், கிரேப்வைன் தளத்தில் தான் அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். 24 வயதான பொறியாளர், பெங்களூரில் உள்ள FAANG என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் ஆண்டுக்கு 58 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
“வாழ்க்கை நிறைவுற்றதாக உணர்கிறேன்” என்ற தலைப்பில் அவர் இந்த கடிதத்தைப் பகிர்ந்துள்ள அவர், கடந்த 2.9 வருடங்களாக வசதியான வாழ்க்கையை வாழ்ந்த போதிலும் அவர் தனிமையில் இருந்ததாக அந்த நபர் கடிதத்தில் எழுதியுள்ளார்.அந்த நபர் தனது கடிதத்தில், “நான் என் வாழ்க்கையில் எப்போதும் தனிமையாக இருக்கிறேன். என்னுடன் நேரத்தைச் செலவிட எனக்கு ஒரு காதலி இல்லை, மேலும் எனது மற்ற நண்பர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்வதிலேயே இருக்கிறார்கள்.
மேலும், எனது வேலை வாழ்க்கை கூட சலிப்பானது தான். ஏனென்றால் நான் வேலை செய்யத் தொடங்கியது முதலே ஒரே நிறுவனத்தில் தான் வேலை செய்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் நான் ஒரே வேலையைத் தான் திரும்பத் திரும்ப செய்து வருகிறேன். எனது வேலையில் எந்தவொரு புதிய சவால்களும் இல்லை. அதேபோல எனது கேரியரில் இதன் பிறகு வளர்ச்சி இருக்கும் என்றும் நான் கருதவில்லை” என்று அவர் தனது கடித்ததில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.