சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி ஹேமேந்திரா மெராவி (22) என்பவர் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, திருமணத்திற்கு வந்த பரிசுகளை குடும்ப உறுப்பினர்கள் பார்த்துக் கொண்டிருந்தன. அப்பொழுது, பரிசுப் பொருளாக வந்த ஹோம் தியேட்டர் சிஸ்டத்திற்கு மெராவி மின் இணைப்பு கொடுத்துள்ளார். மின் இணைப்பு கொடுத்ததும் திடீரென அது வெடித்து சிதறியது. இந்த விபத்தில் மெராவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவரது சகோதரர் ராஜ்குமார் மற்றும் ஒன்றரை வயது சிறுவன் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மெராவியின் சகோதரர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், வீட்டின் அறையை ஆய்வு செய்தபோது வெடி விபத்துக்கான எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை என்றும் மியூசிக் சிஸ்டம் மட்டுமே வெடித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வெடித்த ஹோம் தியேட்டர் மணப்பெண்ணின் முன்னாள் காதலன் கொடுத்த பரிசு என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், ஹோம் தியேட்டர் அமைப்பினுள் யாரோ வெடிமருந்துகளை வைத்ததால் தான் வெடி விபத்து ஏற்பட்டது என தெரியவந்தது. பின்னர், திருமணத்தின் போது கிடைத்த பரிசுகளின் பட்டியலை போலீசார் விசாரிக்கத் தொடங்கியபோது, ஹோம் தியேட்டர் மணமகளின் முன்னாள் காதலரின் பரிசு என்பதைக் கண்டுபிடித்தனர்.
பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் சர்ஜு என்பவர் அடையாளம் காணப்பட்டு, அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்தவரிடம் விசாரணை நடத்தியபோது, குற்றம் சாட்டப்பட்டவர், தனது முன்னாள் காதலி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதற்காக கோபத்தில், ஹோம் தியேட்டருக்குள் வெடி மருந்தை வைத்து பரிசாக கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.