திருத்தணியில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மற்ற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் கார்த்திகேயன் இல்லத்தில் குடில்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் முருகன் கோவில் தொடர்புடைய வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவில் அரக்கோணம் சாலையில் இருக்கும் கார்த்திகேயன் குடில்களில் கோவில் சூப்பிரண்ட்கள் கலைவாணன், வித்தியாசாகர் இருவருக்கும் சிக்கன், மட்டன், முட்டை போன்ற அசைவ உணவுகளை கோவில் ஊழியர்களே பரிமாறுகின்றனர். சூப்பிரண்டுகள் இருவரும் ருசித்து சாப்பிடுகின்றனர். இந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.
வீடியோவை பார்த்த முருக பக்தர்கள், பொதுமக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் கோவில் சூப்பிரண்டுகளுக்கு கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். பக்தர்கள் தங்குகின்ற அறையில் சைவத்தைத் தவிர மற்ற உணவுகளுக்கு அனுமதி இல்லை என தெரிந்தும் விதிகளை மீறிய ஊழியர்கள் மீது இந்து அறநிலைத்துறை ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.