பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காரீஃப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார். துவரம் பருப்பு, மக்காச்சோளம், நெல், உளுந்து, கம்பு, உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார். காரீஃப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்யவும், பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து நெல்லுக்கான ஆதார விலை 7 சதவீதம் உயர்த்தப்பட்டு, குவிண்டாலுக்கு ரூ.2,183ஆக நிர்ணயம் செய்துள்ளது. சூரியகாந்தி விதையின் குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால் 3,750 ரூபாயிலிருந்து 6,760 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சோயா பீன்ஸ் ஒரு குவிண்டால் 2,560 ரூபாயிலிருந்து 4,600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நிலக்கடலையின் குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால் 4,000 ரூபாயிலிருந்து 6,377 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. துவரம் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை 4,350 ரூபாயில் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் கேழ்வரகுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.1,500ல் இருந்து ரூ.3,846 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.