குழந்தை சுகப் பிரசவத்தில் பிறந்தால் நன்றாக இருக்கும் என்பது பெரும்பாலானோரின் எண்ணமாக இருக்கிறது. சிசேரியன் செய்தால் அதனால் ஏற்படும் வலி காலத்திற்கு தொடரும். அதுமட்டுமின்றி பணத்தை வசூலிக்கவும் இப்படியான நிகழ்வுகள் அரங்கேறுவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.
சிசேரியனில் தாய், சேய் என இருவரும் நலமுடன் இருப்பார்கள் என்பது உறுதி செய்யப்படும். இந்த சூழலில் தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் புள்ளிவிவரங்களில் முக்கியமான ஒரு விஷயம் தெரியவந்துள்ளது. அதாவது, கடந்த நிதியாண்டில் அரசு மருத்துவமனைகளை காட்டிலும் தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் குழந்தை பிறப்புகள் அதிகரித்துள்ளன.
5ல் 2 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டால், 5ல் 3 பேருக்கு தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்கின்றனர். 2022-23ஆம் நிதியாண்டில் தனியார் மருத்துவமனைகளில் 5 சதவீதம் சிசேரியன் குழந்தை பிறப்புகள் அதிகரித்துள்ளன. தனியார் மருத்துவமனைகளில் ஏன் சிசேரியன் அதிகரிக்கின்றன என்ற கேள்வி எழலாம். இதுபற்றி மூத்த மருத்துவர்கள் சிலரிடம் விசாரிக்கையில், ஐ.வி.எஃப் மூலம் கருத்தரித்து குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் பெரும்பாலானோருக்கு சிசேரியன் தான் செய்யப்படுகிறது.
இவர்கள் சுகப் பிரசவத்திற்காக காத்திருப்பதில்லை. விரைவாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகின்றனர். இதுதவிர உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றால் அனிமீயா, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவை பெரும்பாலான பிரசவங்களில் அதிகரித்து விடுகின்றன.
எனவே தாயும், சேயும் நலமுடன் இருக்க சிசேரியன் செய்ய வேண்டிய கட்டாயம் நிலவுவதாக கூறுகின்றனர். சில சமயங்களில் ராசி, நல்ல நேரம் பார்த்து குழந்தை பிறக்க சிசேரியன் செய்ய வேண்டும் என பெற்றோரே கேட்டுக் கொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.