கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு உற்பத்தியை சீரம் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிய நேரத்தில், கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் உருவாக்கின. அந்த தடுப்பூசியை புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கியது. பின்னர் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில், 2021 டிசம்பர் மாதம் கோவிஷீல்டு உற்பத்தியை சீரம் நிறுவனம் நிறுத்தியது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், அதனை கருத்தில் கொண்டு கோவிஷீல்டு உற்பத்தியை சீரம் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயலக அதிகாரி ஆதார் பூனாவாலா கூறுகையில், ”அதிகரித்து வரும் கொரோனாவால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கோவோவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி சுமார் 6 மில்லியன் இருப்பில் உள்ளது. இளைஞர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். அடுத்த 90 நாட்களுக்குள் 6 முதல் 7 மில்லியன் கோவிஷீல்டு தடுப்பூசியை இருப்பில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.