தமிழகத்தில் அதிகரித்துள்ள போதைபொருள் கலாசராத்திற்கு எதிராக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 30ஆம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தவிருப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருள் கலாச்சாரம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. போதைக் கலாச்சாரத்தால் மிகப்பெரிய பேரழிவை நோக்கி தமிழ்நாடு பயணித்து கொண்டிக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொள்ளாதது ஏமாற்றமளிக்கிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதன் மூலமாக மட்டுமே போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த முடியும். தமிழ்நாட்டில் கல்வி நிறுவன பகுதிகளில் தான் போதைப்பொருள் அதிகம் விற்பனையாகிறது.
![தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதைபொருள் கலாச்சாரம்..! பாமக சார்பில் வரும் 30ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/01/ramadass-stalin-1623223468.jpg)
கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த மாணவர் ஒருவர் தடை செய்யப்பட்ட போதை ஊசிகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால், உடல்நலம் பாதிக்ப்பட்டு சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். போதைக்கு அடிமையாகும் மாணவர்களும், இளைஞர்களும் மிகக்குறைந்த வயதிலேயே தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கின்றனர். தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வரும் 30ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படவுள்ளது” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.