கோடை வெப்பம் அதிகரிக்கும் என மத்திய அரசு எச்சரித்துள்ள நிலையில், வெப்ப அலையை எதிர்கொள்ள மக்களுக்கு தமிழக சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி, மின்சார வாரியத்துடன் ஆலோசனை நடத்தி குளிரூட்டும் கருவிகள் இதர சாதனங்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் அதிக வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதத்திற்கு தேவையான சிகிச்சைகள் வழங்க மருத்துவர் கட்டமைப்புகளை தயார் நிலையில், வைக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் பிற்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் குழந்தைகள், வயதானவர், கர்ப்பிணிகள் முடிந்த வரை வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஒரு வேலை வெளியே செல்ல வேண்டி இருந்தால் குடை, உடலை முழுதாய் மறைக்கும் பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பழங்களை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதிக தண்ணீரை பருக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி உள்ளிட்டவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடைகால நோய்களுக்கான மருந்துகளை கைவசம் வைத்திருத்தல் போன்ற அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமாறு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.