குரூப் 4 தேர்வில் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையில் திருத்தம் கொண்டு வர தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அறிவிக்கப்பட்ட காலியிடங்கள்…
கிராம நிர்வாக அலுவலர் பதவியின் கீழ் 274 காலியிடங்களும், குரூப் 4 நிலை பதவியின் கீழ் 6,864 பணியிடங்களும், பல்வேறு வாரியங்களில் கீழுள்ள பதவிகளின் கீழ் 163 பணியிடங்களும் அறிவிக்கப்பட்டன. எனவே, மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 7301 ஆகும்.

புதுகாலியிடங்கள் எண்ணிக்கை…
புதுகாலியிடங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், கூடுதல் பணியிடங்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் டிஎன்பிஎஸ்சி இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதைய திருத்தம் ஏதற்கு..?
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையானவர்களைத் தகுந்த போட்டித் தேர்வுகள் நடத்தி தேர்வு செய்யும் பணிகளை டிஎன்பிஎஸ்சி செய்கிறது. 2022 ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு அறிவிக்கை கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி வெளியிட்டதாகும். எனவே, அப்போதைய மதிப்பீட்டின் அடிப்படையில் 7,301 இடங்கள் அறிவிக்கப்பட்டன. எழுத்துத் தேர்வு நடைபெற்று 5 மாதங்கள் கடந்த நிலையில், கூடுதல் பணியிடங்களுக்கான தேவை ஏற்பட்டிருக்கலாம்.
மேலும், டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட, 2023ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணையின் படி, குரூப்-IV தேர்வு குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் வெளியிடப்படும் என்றும் அதற்கான தேர்வு 2024இல் தான் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தது. எனவே, இதுபோன்ற பல்வேறு நிர்வாக சூழல்களை கருத்தில் கொண்டு, தற்போது குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவெடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பணியிடங்களை அதிகரிக்கும்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் என்ன..?
டிஎன்பிஎஸ்சி வழிமுறைகளின் படி, அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் சில நிபந்தனைகளின் படி மாற்றம் செய்து கொள்ளலாம். குரூப் 4 பதவிகள், ஒரே நிலை எழுத்துத் தேர்வின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதால், எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரோ/ நேர்காணலுக்கு (counselling) அழைக்கப்படுவதற்கு முன்னரோ காலிப் பணியிடங்களை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடும்.

வெற்றி வாய்ப்பு நிலவரம்..?
எழுத்துத் தேர்வின் அடைப்படையில், ஒவ்வொரு, இடஒதுக்கீடு பிரிவுகளிலும் அறிவிக்கப்பட்ட பணி இடங்களை விட 2 மடங்கு பேர் மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். எனவே, எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்னரே, காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டால், மூலச் சான்றிதழ் மற்றும் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படும் தேர்வர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும். காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், கட் ஆஃப் மதிப்பெண்கள் குறையத் தொடங்கும். எனவே, தற்போது கட்- ஆஃப் மதிப்பெண்களில் விளிம்பு நிலையில் இருக்கும் தேர்வர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும்.