சுதந்திர தின விழா பொது விடுப்புக்கு மறுப்பு தெரிவித்த 158 வணிக நிறுவனங்களுக்கு தொழிலாளர் நலத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும் நேற்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. உச்சகட்ட பாதுகாப்பில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். இதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலினும் சென்னை ஜார்ஜ் கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதற்கிடையே, சுதந்திர தினத்தையொட்டி பொது விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இதை முன்னிட்டு பொது விடுமுறை விடப்படாத ஹோட்டல்கள், தனியார் நிறுவனங்களில் தொழிலாளர் நலத்துறை ஆய்வு செய்தனர். அப்போது, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 158 வணிக நிறுவனங்கள் உரிய அனுமதியின்றி அரசு உத்தரவு மீறி ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. தொழிலாளர் நலத்துறை சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்ட நிறுவனங்கள் நேரில் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சுமார் மூன்று லட்ச ரூபாய் அளவிற்கு அபராதம் விதித்து தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மைவிழி செல்வி உத்தரவு பிறப்பித்துள்ளார்.