3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷ் சென்றுள்ளது. 3 ஒருநாள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா-பங்களாதேஷ் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடந்தது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் பேட்ஸ்மேன்கள் இந்தியா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். பங்களாதேஷ் அணி 69 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஆனால் மெஹதி மற்றும் மகமதுல்லா சிறப்பான பார்டனர்ஷிப்பின்னால் பங்களாதேஷ் அணி சரிவில் இருந்து மீண்டது. இந்த ஜோடி 7-வது விக்கெட்டிற்கு 148 ரன்கள் குவித்தனர். மகமதுல்லா 77 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் நிலைத்து ஆடிய மெஹிதி ஹசன் சதமடித்து அசத்தினார். மேலும் அவர் 83 பந்துகளில் 100 றன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 50 ஓவர் முடிவில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் அடித்தது.
272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது, ரோஹித் காயம் காரணமாக முதலில் இறங்கவில்லை, துவக்க ஆட்டக்காரர்களான கோலி (5), தவான் (8) போன்ற சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பின்நால் வந்த வாஷிங்டன் (11) கே.எல் ராகுல் (14) ரன்கள் எடுக்க.. அதன் பிறகு வந்த அக்சர் படேல்- ஷ்ரேயஸ் ஐயருடன் சேர்ந்து நிதானமாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர், ஒரு கட்டத்தில் ஷ்ரேயஸ் ஐயர் 82 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார். பிறகு அக்சர் படேலும் 56 ரங்களுக்கு ஆட்டமிழந்தார், தாக்கூர்(7), சிராஜ் (2) என ஆட்டமிழந்தனர். ரோஹித் சர்மா 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தும் இந்திய அணியால் 50 ஓவர் முடிவுக்கு 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 5 ரன் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி இரண்டாவது ஒருநாள் போட்டியையும் வென்று, இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.