ஐசிசி உலக கோப்பை 2023 தொடரின் இந்தியா – பாகிஸ்தான் லீக் போட்டியை காண கூடுதலாக 14000 டிக்கெட்டுகளை வெளியிடவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐசிசி உலக கோப்பை 2023 தொடர் அகமதாபாத்தில் தொடங்கிவிட்டது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை, நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. இந்திய அணி முதல் போட்டியில் வரும் 8 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. இவ்விரு அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களைப் பொறுத்தவரை லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியுடன் மோதும் போட்டியை காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்போட்டியானது அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கடைசியாக இவ்விரு அணிகளும் 2023 ஆசியக் கோப்பையின்போது சந்திக்க இருந்தன. மழை குறுக்கிட்டதால் அந்தபோட்டி கைவிடப்பட்டது. அதனால் உலக கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடுவதை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்தவகையில் இப்போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை கடந்த 6ம் தேதி தொடங்கியது. ஐசிசி ஆன்லைன் வெப்சைட் மற்றும் BookmyShow தளங்களில் ரசிகர்கள் ஆன்லைனில் டிக்கெட்டை புக் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்த போட்டியை காண கூடுதலாக 14000 டிக்கெட்டுகளை வெளியிடவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இன்றுமதியம் 12 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.