அமெரிக்காவில் அதிகரித்து வரும் இந்திய மாணவர்களின் இறப்பு கவலை அளிப்பதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது போன்ற வழக்குகள் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாதவை என்றாலும் இந்த சம்பவங்கள் மத்திய அரசிற்கு கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மாணவர்களுக்கு ஏற்படும் அசம்பாவிதம் அவர்களது குடும்பத்திற்கு மிகப்பெரிய சோகம் மற்றும் எங்களுக்கு அது மிகப்பெரிய கவலை என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த ஒவ்வொரு சம்பவத்தையும் கூர்ந்து நோக்கும் இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரகங்களுக்கு இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதவை என தெரியும் என்று எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய தூதரக அதிகாரிகள் மாணவர்களுடன் தொடர்பில் இருக்குமாறும் அவர்களுடன் அடிக்கடி உரையாடி வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்திய மாணவர்களுக்கு ஆபத்தான பகுதிகள் மற்றும் தவிர்க்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து ஆலோசனை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
பல்வேறு நாடுகளில் 11 லட்சம் முதல் 12 லட்சம் இந்திய மாணவர்கள் வாழ்கிறார்கள் என்று கூறிய அமைச்சர், “மாணவர் நலன் மிகவும் முக்கியம். நான் சொன்னது போல் ஒவ்வொரு இந்தியனும் வெளியூர் செல்வதற்கு மோடியின் உத்தரவாதம் உள்ளது. குறிப்பாக எங்களுக்கு மாணவர் நலன் முக்கியம். ” எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்தியர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஜெய்சங்கரின் இந்த கருத்து வந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், ஓஹியோவில் உமா சத்ய சாய் காடே என்ற இந்திய மாணவி இறந்து கிடந்தார். மரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.
ஐதராபாத்தில் உள்ள நாச்சரம் பகுதியைச் சேர்ந்த முகமது அப்துல் அர்பத் கிளீவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் ஐடி முதுகலை படிப்பதற்காக அமெரிக்கா வந்தார். கடந்த மாதம் காணாமல் போன இவர் ஏப்ரல் ஒன்பதாம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கடந்த மாதம், கொல்கத்தாவைச் சேர்ந்த 34 வயதான பரதநாட்டியம் மற்றும் குச்சுப்புடி நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ் மிசோரியில் சுட்டுக் கொல்லப்பட்டார். தொலைக்காட்சி நடிகை தேவோலீனா பட்டாச்சார்ஜியின் கூற்றுப்படி, கோஷ் செயின்ட் லூயிஸ் அகாடமியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சமீபத்திய மாதங்களில் அமெரிக்க நாட்டில் இந்திய மாணவர்கள் இறந்த சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகங்கள், மாணவர்களை மேம்படுத்தும் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளன.
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் உயிரிழக்கும் வகையில் சில அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.