பரிந்துரைக்கப்பட்ட அளவை விட, அதிகமாக இந்தியர்கள் உப்பை எடுத்து கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நேச்சர் போர்ட்போலியோ இதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியர்கள் ஒருநாளைக்கு அதிகபட்சமாக 8 கிராம் உப்பு எடுத்து கொள்கின்றனர். இது உலகளவில் பரிந்துரைக்கப்பட்ட உப்பு அளவான 5 கிராமை விட அதிகமானது. தேசிய தொற்றா நோய் கண்காணிப்பு மையம் சார்பில் 3,000 பேரின் சிறுநீர் மாதிரியில் உள்ள சோடியம் வெளியேற்றம் குறித்து ஆய்வு நடத்தினர்.
உலக அளவில் உள்ள பார்முலாக்களை கொண்டு, உப்பு உட்கொள்வது மதிப்பிடப்பட்டது. இதில் அதிகப்படியான உப்பு நுகர்வு அனைத்து சமூகங்களிலும் பரவலாக உள்ளது என்பதைக் கண்டறிந்தது. மேலும் ஆண்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக சராசரியாக 8.9 கிராம் உப்பை எடுத்து கொள்கின்றனர்.பெண்கள் தினமும் சராசரியாக 7.9 கிராம் உப்பு எடுத்து கொள்கின்றனர். கூடுதலாக, சில குறிப்பிட்ட குழுக்கள் அதிக உப்பு எடுத்து கொள்வதை குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் வேலைக்கு செல்லும் தனிநபர் சராசரியாக 8.6 கிராம், புகையிலை பயன்படுத்துவோர் 8.3 கிராம், உடல் பருமன் கொண்டவர்கள் 9.2 கிராம், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் 8.5 கிராம் உப்பை எடுத்து கொள்கின்றனர்.
உப்பு நுகர்வு அதிகரிப்பால், உடலில் சோடியம் அளவு அதிகரித்து, உயர் ரத்த அழுத்த பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது. உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கடுமையான உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு சோடியம் நுகர்வை, ஒரு நாளைக்கு குறைந்தது 1.2 கிராம் என்ற அளவில் குறைப்பது மட்டுமே, உயர் ரத்த அழுத்த சிகிச்சை தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கையை கணிசமாக 50 சதவீதம் அளவிற்கு குறைவதற்கு வழிவகுக்கும்.