இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை மும்பை – அகமதாபாத் இடையே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.. 508 கிமீ நீளமுள்ள அகமதாபாத்-மும்பை அதிவேக ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தனர்.. இந்த புல்லட் ரயில் திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ.1.08 லட்சம் கோடி ஆகும். இந்த திட்டத்துக்கான தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவிகள் ஜப்பான் நாட்டில் இருந்து பெறப்பட்டுள்ளது. ஜப்பானின் பிரபலமான ஷிங்கன்சென் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது..
இந்த திட்டம் 2023-க்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்ட நிலையில், கொரோனா பெருந்தொற்று மற்றும் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் போன்ற காரணங்களால் இந்த புல்லட் ரயில் திட்டத்தில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இத்திட்டத்தின் 26% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், இது இன்னும் 4 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த புல்லட் ரயில் நீருக்கடியில் 21 கிலோமீட்டர் பயணிக்க உள்ளது.. இதற்காக நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.. இதன் மூலம் இந்தியாவில் முதன் முறையாக மக்கள் நீருக்கடியில் ரயில் பயணத்தை அனுபவிக்க முடியும்.. இந்த புல்லட் ரயில் தானேயில் தண்ணீருக்கு அடியில் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல்லட் ரயிலின் பாதையில், மூன்று நிறுத்தங்கள் இருக்கும்: மகாராஷ்டிராவில் ஒன்று மற்றும் குஜராத்தில் இரண்டு. ஒரு நிறுத்தம் சூரத்திலும் மற்றொன்று சபர்மதியிலும் இருக்கும். நிலம் கையகப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப அனுமதிகள் பெறப்பட்ட பின்னரே திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது தெரியவரும்..