வடகிழக்கு மாநிலங்களுக்கு மருந்து பொருட்களை டெலிவரி செய்யும் ட்ரோன்களை ஆப்ரேட் செய்யும் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெண், இந்தியாவின் முதல் பெண் ட்ரோன் ஆபரேட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்தும் முறை அதிகரித்து வருகிறது. படப்பிடிப்பு நடத்தவும் பொருட்களை டெலிவரி செய்யவும் இந்த ட்ரோன்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக போக்குவரத்து மூலம் பொருட்கள் எடுத்து செல்ல முடியாத பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் மிக எளிதாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அந்தவகையில், அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர் நிக் ஜாஸ்மின். ஏர்லைன்ஸ் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மையின் முதுகலை பட்டம் பெற்ற இவர், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ட்ரோன் ஆப்ரேட்டர் பணியில் சேர்ந்துள்ளார். ’வானில் இருந்து மருத்துவம்’ என்ற திட்டத்தின் கீழ் தற்போது அவர் மருத்துவ நிவாரணம் மற்றும் மருந்து பொருட்களை கொண்டு செல்லும் ட்ரோன் ஆபரேட்டராக நிக் ஜாஸ்மின் தற்போது பணிபுரிந்து வருகிறார். வடகிழக்கு மாநிலங்களில் கடினமான பகுதிகளில் மருத்துவ பொருட்களை டெலிவரி செய்யும் இவர், ஏற்கனவே ஒரு பாராகிளைடர் பயிற்சி பெற்ற பைலட் என்பதும் அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் பணிபுரிந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஜாஸ்மின் கூறிய போது ’நான் ஒரு பாராகிளைடர் பைலட் மற்றும் பல்வேறு சர்வதேச நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளதால் எனக்கு இந்த பணி எளிதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். ட்ரோன் சேவையை உள்ளூர் செய்திகளில் தெரிந்து கொண்டு இந்த வேலைக்காக விண்ணப்பித்தேன் என்றும் தற்போது இந்த வேலையில் சேர்ந்து உள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.