சந்திராயன் – 3 விண்கலம் சரித்திர சாதனை படைத்துள்ள நிலையில், சைக்கிளில் எடுத்துச்செல்லப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
எத்தனை சவால்களை கடந்து சந்திராயன் – 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் கால்பதித்து இந்தியா வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதன் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் இறங்கி படங்களை வெற்றிகரமாக அனுப்பியும் வருகிறது. ஒட்டுமொத்த தேசமும் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறது. அந்தவகையில், இந்த வரலாற்று வெற்றியை பெற இந்தியா கடந்து வந்த பாதை தொடர்பான பழைய சரித்திர புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
அந்தவகையில், 1963ம் ஆண்டு கேரளா மாநிலம் திருவனந்தபுரம் தம்பா ஆய்வு மையத்துக்கு சைக்கிளில் ராக்கெட்டை விஞ்ஞானிகள் எடுத்து செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதுமட்டுமில்லாமல், 1960களில் இளம் விஞ்ஞானிகள் பரிசோதனை ராக்கெட்டை உருவாக்கும் முயற்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் இருப்பது வைரலாகி வருகிறது.